தடுப்பூசி போடுவதில் பலன் இருக்குமா?
கொரோனா பாதிப்பு காரணமாக ரஷ்யாவில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தற்போது தொடங்கியுள்ளது. – செய்தி
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. அதன் தீவிரத்தின் எல்லை எதுவென தெரியாத சூழலில் மக்கள் செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருக்கின்றனர்.
கொரோனா வைரஸ் மனிதர்களை மட்டும் தான் தாக்குமா? மிருகங்களை குறிப்பாக வளர்ப்புப் பிராணிகளைத் தாக்குமா என்ற கேள்விகளுகெல்லாம் விடைதெரியாமல் இருந்தது.
கடந்த சில மாதங்கள் முன்பு வரை கேள்விக்கு பதில் கிடைத்ததுபோல் தற்பொழுது சிங்கங்கள், குரங்குகள், நாய்கள் என செல்லப் பிராணிகளுக்கும் கொரோனாவின் தாக்கம் ஏற்பட ஆரம்பித்து விட்டது என்ற செய்தி மக்களைக் கதி கலங்க வைத்திருக்கிறது.
இதனை அடுத்து விலங்குகளிடமிருந்தும் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் சாத்தியம் மிக அதிகமாகவே இருக்கிறது என்பதற்காக பலர் தங்களது செல்லப் பிராணிகளை துரத்தியோ அல்லது திரும்ப வராதவாரோ செய்ய முயற்சிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், சிலர் தங்கள் செல்லப்பிராணிகளைப் பிரிய மனமின்றி செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி கொண்டுவர வேண்டும் என கோரிக்கைகள் வைத்திருக்கும் செய்தியும் பல நாடுகளில் வைரலாகி வருகின்றன.
இது குறித்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலோரியா என்பவர் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவியதற்கான எந்த ஓர் ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஆனாலும் மக்களுக்கு இதில் இன்னும் நம்பிக்கை பிறக்கவில்லை. நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை தெருக்களில் விட வேண்டிய அவசியமில்லை என அம்மருத்துவமனை இயக்குநர் தெரிவித்தும் மக்கள் நம்ப மறுக்கின்றனராம்.
இதில் மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டுமே! மனிதர்களைத் தாக்கும் தொற்று ஏன் மிருகங்களை அதிகமாக நெருங்கவில்லை என்பதற்கு ஆய்வுப்பூர்வமாக பதில் இல்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
அப்படியானால் மிருகங்களுக்கு எதிர்ப்பு சக்தி இயல்பாகவே இருக்கிறதா? என்ற கேள்வியும் எழுகிறதல்லவா?
ஆனாலும் தற்பொழுது ரஷ்யாவில் செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளதாக செய்தி கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், பலரும் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவதில் ஆர்வம் கட்டி வருகின்றனராம்.
தெருவில் அல்லது துரத்திவிடுவதைக் காட்டிலும் தடுப்பூசி போடுவது நிம்மதியைத்தரும் என்று அவர்கள் நம்புகிறார்களோ!
–கா.இளமணி