கிள்ளான் செட்டி பாடாங் விவகாரம்!
கிள்ளான்-
வரலாற்றுமிக்க கிள்ளான் செட்டி பாடாங் பெயர் மாற்ற விவகாரத்திற்கு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி நியாயமான தீர்வு காணவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிள்ளானில் நன்கு பிரசித்திப் பெற்ற இடமாகவும் இந்தியர்களின் வரலாற்றுப் பாரம்பரிய இடமாகவும் திகழும் ‘செட்டி பாடாங்’ என்ற இடத்தின் பெயரை தற்போது ‘டத்தாரான் மஜ்லிஸ் பெர்பண்டாரான் கிளாங்’ என மாற்றப்பட்டு இந்திய சமுதாயத்தின் அடையாளத்தை அழிப்பதற்கு அச்சாரம் போட்டதுபோல் உள்ளது என ம இ கா சிலாங்கூர் மாநிலத் தொடர்புக்குழுத் தலைவர் எம்.பி.ராஜா சாடினார்.
இந்தியாவிலிருந்து கடல் வழியாக இந்நாட்டின் மேம்பாட்டிற்கு உழைப்பதற்காக வருகைப் புரிந்த நமது தொப்புள் கொடி உறவுகள் போர்ட்கிள்ளானிலும் கிள்ளானிலும்தான் தங்களின் அடையாளத்தையும் வாழ்க்கைப் பயணத்தையும் தொடங்கினார்கள். அப்போதிலிருந்து இப்பகுதிகளில் பல இடங்களில் அவர்களின் கலடிச்சுவடுகள் பதிந்துள்ளன.
அவர்களால் அடையாளம் காணப்பட்டு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட இந்த செட்டி பாடாங் என்ற பெயரை மாற்றக்கூடாது எனக் கேட்டுக்கொண்ட எம்.பி.ராஜா, தற்போது பொறுப்பில் இருக்கும் கிள்ளான் நகராண்மைக் கழக இந்திய உறுப்பினர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இவ்விவகாரத்தை விட்டுக் கொடுக்காமல் போராடி நிலைநாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
. கிள்ளான் நகராண்மைக் கழக இந்திய உறுப்பினர்களின் பார்வைக்குக் கொண்டு வராமலே இது முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது. அவர்களிடம் இதுகுறித்து கிள்ளான் நகராண்மைக் கழகம் கலந்தாலோசிப்பதே சரியான முடிவாகும்.
கிள்ளான் வட்டாரத்தில் நன்கு பிரசித்திபெற்ற ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் ( முன்பு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயம் ) அருகில் இருக்கும் அந்தத் திடலில் தற்போது மேம்பாட்டுப் பணிகளை கிள்ளான் நகராண்மைக் கழகம் மேற்கொண்டு வந்தாலும் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ‘ செட்டி பாடாங்’ என்ற பெயரையே சூட்ட வேண்டும் என அனைத்து தரப்புகளும் சமுதாயப்பிரதி நிதிகளும்கோரிக்கை விடுத்தனர்.
இந்தியர்களின் பல அடையாளங்களுக்கு சமாதி கட்டியாகிவிட்டது. இதையும் அப்படிச்செய்துவிடவேண்டாம், இந்திய தரப்புகள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
–பி.ஆர்.ஜெயசீலன்