சீனா (ஜூன் 17): உலகமே கோவிட்-19 தொற்றுப்பரவலை சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகின்ற இந்த வேளையில் , சீனாவின் வூஹான் நகரில் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளி எதுவும் இல்லாது மாபெரும் பட்டமளிப்பு விழாவை நடந்தியது அனைத்துலக ஊடகங்களை வியப்படையச் செய்துள்ளது.
கோவிட்-19 வைரஸின் தொற்றுப்பரவல் முதன் முதலில் சீனாவின் வூஹானிலேயே கண்டறியப்பட்டதாக கூறப்படுகின்றது.
உலகமே இத்தொற்று நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் நாடளாவிய முடக்கங்களை அனுசரித்தும் வருகின்ற இவ்வாறான ஒரு சூழ்நிலையில், சீனாவின் வூஹானில் 11,000 மாணவர்கள் எந்த கட்டுப்பாடுகளுமின்றி தமது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.
மத்திய சீனாவின் நோர்மல் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு அரங்கத்தில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி இப்பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது.
மேலும் இப்பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்களில் சிலர் மாத்திரமே முகக்கவசம் அணிந்திருந்தனர் என்று சீன ஊடகமான ஹூபே நியூஸ் தெரிவித்துள்ளது.
மேலும் சீனா இக்கோவிட் -19 தொற்று நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விதத்திற்கு நடைபெற்ற இவ்விழா சான்றாக அமைகின்றது.
அத்தோடு நேற்று (ஜூன் 16) புதிதாக 20 பேருக்கு கோவிட் தொற்று அடையாளம் காணப்பட்டது என்றும் அதில் 18 பேர் வெளிநாட்டவர் என்றும் சீனாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.