ஈப்போ (ஜூன் 19) : ஜாலான் ஈப்போ – லுமூட் செல்லும் வழியில் ஒரு லோரியும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 வயது பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஈப்போ தீயணைப்பு துறைக்கு இன்று காலை 10.28 க்கு கிடைத்த அழைப்பினை தொடர்ந்து, விபத்து நடந்த இடத்திற்கு பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சென்று, மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளது என்று தீயணைப்புத்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
“முதலில், பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர் இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரே ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
இவ்விபத்தில் பலியானவர் நூர் ஆயிஷா முகமட் தாஹிர் (26 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறை பிரிவு 1 தலைவர் நூர் ராஷிடாமையாத்தி அப்துல் ரஷிட் தெரிவித்துள்ளார்.
24 டன் கொண்ட லோரியின் கீழ் கார் சிக்கிக் கொண்டதால், உடலை மீட்டெடுப்பதில் எங்களுக்கு பல சிரமங்கள் இருந்தன. இருப்பினும், கிரேன் உதவியுடன் எங்களால் அதை மீட்டெடுக்க முடிந்தது என்றும் முழு நடவடிக்கையும் முடிப்பதற்கு சுமார் நான்கு மணி நேரமானது என்றும் அவர் கூறினார்.
மேலும் சம்பவ இடத்தில் லோரி ஓட்டுநரை தாம் அங்கு காணவில்லை என்றும் அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டதாக நம்பப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
காவல்துறையினர் சம்மந்தப்பட்ட லோரி ஓட்டுநரை தேடிவருகின்றனர் என்றும் பாதிக்கப்பட்டவர் சுங்கை சிப்புட்டில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
“மேருவுக்குச் சென்று கொண்டிருந்த லோரி, பத்து காஜாவுக்கு சென்று கொண்டிருந்த பலியான பெண்ணின் காரை மோதி விபத்து நடந்துள்ளதாக நம்பப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.