சென்னை (ஜூன் 21): ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனின் யூ-டியூப் தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக சென்னை சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதலில் 8 லட்சம் சந்தாதாரர்கள் (subscribers) கொண்ட பப்ஜி மதன் கேர்ள், மதன் 18 பிளஸ் உள்ளிட்ட 2 தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், மீதி உள்ள யூ-டியூப் தளங்களை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பப்ஜி ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த பப்ஜி விளையாட்டை மிகுந்த வார்த்தைகளுடன் கூடிய வர்ணனையுடன் யூ-டியூப்பில் நேரலை செய்துவந்ததாக, யூ-டியூபர் பப்ஜி மதன் மீது 150 க்கும் மேற்பட்ட புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, பப்ஜி மதனை தர்மபுரியில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், ஆபாச பேச்சுக்கள் பேசி மற்றவர்களிடம் பணம் கறப்பதற்கு உடைந்தையாக இருந்த பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவையும் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறுகிய காலத்தில், கோடீஸ்வரர்களாக வேண்டும் என்று திட்டமிட்டு ஆபாசமாக பேசி தானும், தனது மனைவியும் பல கோடிகள் சம்பாதித்ததாக போலீஸ் விசாரணையில் மதன் தெரிவித்தார். தற்போது கணவனும், மனைவியும் போலீஸ் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .







