பெட்டாலிங் ஜெயா, ஜூலை 12:
ஷா ஆலாமில் உள்ள மெலாவதி விளையாட்டரங்கில் (Stadium Malawati) கோவிட் -19 பரிசோதனை மையத்திற்கு வெளியே உள்ள சாலையில் இன்று மக்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இன்று (ஜூலை 12) காலை 8 மணி முதல் நண்பகல் வரை 4,000 பேர் கோவிட் -19 பரிசோதனையில் கலந்து கொண்டனர்.
பரிசோதனை மையத்தின் கொள்ளளவு ஒரு நாளைக்கு 1,200 மற்றும் 1,500 பேர் ஆகும்.
வயதானவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுடன் உள்ள நோயாளிகள், அரங்கத்திற்கு வெளியே சாலையில் வரிசையாக நிற்பதை உள்நாட்டு ஊடகங்கள் (TV3) மற்றும் சமூக வலத்தளங்களில் பரவி வரும் வீடியோக்களில் காணமுடிகின்றது.
மேலும் தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு நோயாளிகளைக் கொண்டு செல்வதற்காக ஏராளமான பேருந்துகள் அருகிலேயே நிறுத்தப்பட்டிருப்பதையும் காண முடிகின்றது.
குறித்த மைதானத்தில் நடந்த வீடியோ காட்சிகள் குறித்து , முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் முகநூலில் “இது உண்மையில் மலேசியாவா?
“நான் நெரிசல் பிரச்சினை ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே இதுபற்றி எழுப்பினேன். மேலும் (நான்) இதற்காக ஒரு தீர்வை பரிந்துரைக்க தயாராக இருந்தேன் என்றும் இது ஏன் இன்னும் இப்படி நடக்கிறது, அத்தோடு மேலும் மோசமடைகிறது? என்றும் “மலேசியர்கள் எங்கள் நண்பர்கள். அவர்களை அரசாங்கம் இப்படித்தான் நடத்த வேண்டுமா?” என்றும் அரசாங்கம் ஒரு தீர்வுடன் பதிலளிக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இது ஒரு அரசியல் பிரச்சினை அல்ல, இருப்பினும் இதனை சரியாக கையாளுவது அரசின் கடமை என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






















