மலாக்கா , ஜூலை 14:
யுஇஎஃப்ஏ யூரோ (UEFA Euro) 2020 கால்பந்து தொடர்பான பந்தையத்தில் ஈடுபட்டதாகக் நம்பப்படும் 11 பேரை “ஓப்ஸ் சோகா VIII” இன் கீழ் மலாக்கா போலீசார் கைது செய்தனர்.
19 முதல் 69 வயதுக்குட்பட்ட அனைவருமே உள்ளூர்வாசிகள் என்றும் தொடர்ச்சியான சோதனைகளில் அனைவரையும் கைது செய்ததாக மாநில குற்றவியல் புலனாய்வுத் துறை ACP முகமட் சுக்ரி கமான் தெரிவித்தார்.
“சந்தேக நபர்கள் ஜூன் 10 முதல் ஜூலை 13 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கடைகள் மற்றும் வீடுகளில் வைத்து கைது செய்யப்பட்டனர்” என்று அவர் புதன்கிழமை (ஜூலை 14) ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
நான்கு கணினிகள், இரண்டு மடிக்கணினிகள், 14 கைத்தொலைபேசிகள் மற்றும் 10 யூரோ 2020 கால்பந்து பந்தயக் குறிப்புகள் உள்ளிட்ட 582 வெள்ளி ரொக்கம், 40,000 வெள்ளி மதிப்புள்ள பந்தய அட்டைகள் மற்றும் சூதாட்டப் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக ACP முகமட் சுக்ரி கூறினார்.
சந்தேக நபர்கள் 1953 ஆம் ஆண்டின் பந்தயச் சட்டத்தின் பிரிவு 6 (3) இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள் என்றும் இப்பிரிவு ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 200,000 வெள்ளி அபராதமும் விதிக்க வழி செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.