தலைமை நீதிபதி அதிரடி!!
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற வளாகத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் பராமரிக்க உத்தரவிடக்கோரி வழக்குரைஞர் என்.ராஜ்குமார் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
உயர்நீதிமன்ற வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குப்பைகள் தரம் வாரியாகப் பிரிக்கப்பட்டு, அங்கேயே அவற்றை உரமாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியிருந்தார்.
2017ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வரும் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது .
அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் , உயர்நீதிமன்ற வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் தினமும் 19 துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார் .
பின்னர் தலைமை நீதிபதி பேசும்போது , உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்டோரின் சிலைகள் சுத்தம் செய்யப்படாமல் இருக்கின்றன. அதனை நானே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடப் போகிறேன் என்றார்.
இந்தப் பணிக்கு, என்னுடன் வழக்குரைஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் சேர்ந்து பணியாற்ற முன்வரவேண்டும். எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கருத்து தெரிவித்தார்.