ஒருநாள் வருந்த வேண்டி வரும் !
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றது தவறு என்றும் அதற்காக ஒரு நாள் வருத்தப்பட வேண்டியது வரும் என்றும் அங்கு கூட்டுப்படை தளபதியாக இருந்த ஜெனரல் டேவிட் பீட்டரஸ் கூறியுள்ளார்.
2011 இல் ஆப்கானிஸ்தானில் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளின் தளபதியாக இருந்தவர் இவர். தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கை ஓங்கி உள்ளதால், அமெரிக்க இராணுவத்தின் உதவி இல்லாத நிலையில், ஆப்கான் படைகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தலிபான்களை விட்டு ஓடிவிடவோ அல்லது சரணடையவோ மட்டுமே வாய்ப்புள்ளதாக அவர் கூறினார். இனி அல் கொய்தா, ஐஎஸ் அமைப்புகள் மீண்டும் தலை தூக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா , நேட்டோ படைகளைத் திரும்பப் பெறுவது தவறான முடிவு என முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் விமர்சித்துள்ளார். இந்த முடிவால் ஆப்கானிஸ்தான் பெண்கள் , சிறுமிகள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மிருகத்தனமானவர்களால் அவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்பதால் தனது இதயமே நொறுங்குவதாக வேதனை தெரிவித்துள்ளார் அவர்.