ராகுல் காந்தி வரவேற்பு!
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், தேசத்துரோக சட்டம் இன்னமும் தேவையா? என்று சுப்ரீம் கோர்ட்டு மத்திய அரசுக்கு கேள்வி விடுத்தது.
தேசத்துரோக சட்டம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி, கோகலே போன்ற தலைவர்களை கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசால் அறிமுகம் செய்யப்பட்டது இந்த சட்டம்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பின்னும் இந்த சட்டம் தேவையா? பேச்சு சுதந்திரத்தை முடக்குவதற்கான இந்த காலனி ஆட்சி கால சட்டம் தற்போது தேவையா. பல பழைய, தேவையில்லாத சட்டங்களை, மத்திய அரசு நீக்கியுள்ளது.
ஒரு மரத்தை துண்டாக்க ஒருவரிடம் கொடுக்கப்பட்ட ரம்பத்தால் ஒரு காட்டையே அழிப்பது போன்று தான் இந்த தேச துரோக சட்டம் உள்ளது. யாரையாவது பிடிக்காவிட்டால் அல்லது யார் புகார் கூறினாலும் எந்த கேள்வியும் இல்லாமல் இந்த சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும்.
ஏதோ ஒரு சிறிய கிராமத்தில் உள்ள சாதாரண நபரை அவரைப் பிடிக்காவிட்டால் அங்குள்ள போலீசார் இந்த சட்டத்தில் வழக்கு தொடர முடியும். எங்கள் முக்கியமான அச்சம் இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து தான். இந்த சட்டத்தை ஏன் நீக்கக் கூடாது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துகளை வரவேற்கிறோம்’’ என பதிவிட்டுள்ளார்.