ஒய்யாரமாய் பறப்பது மட்டும்தானே தெரியும்!

ஒலிம்பிக் கொடியில்ஐந்து வளையங்கள் 

எதைக்குறிக்கின்றன

ஒலிம்பிக் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது 5 நிறங்களுடன் பின்னிப் பிணைந்த 5 வளையங்கள் கொண்ட கொடி தான்.

ஒலிம்பிக் தொடக்க விழாவின் போது, ஒலிம்பிக் கொடியானது போட்டி நடைபெறும் இடத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் உயர ஏற்றப்படுகிறது. இந்த ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தது யார்? கொடியில் உள்ள 5 வளையங்கள் எதைக் குறிக்கின்றன?

5 வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் கொடி, 1912- இல் ‘பேரோன் பியர் டி கூபெர்டின்’ என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இவர் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் இணை நிறுவனர் என்றே அழைக்கப்படுகிறார். ஃபிரான்ஸில் பிறந்த பேரோன் டி கூபெர்டின், கிட்டத்தட்ட 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்க ஒலிம்பிக் முறையை மாற்றி, 1896-  ஆம் ஆண்டு அது புத்துயிர் பெறுவதில், முக்கியப் பங்கு வகித்தார்.

1912- ஆம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ கொடி பேரோனாவால் வடிவமைக்கப்பட்டு, 1914-  ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) தனது 20-  ஆவது ஆண்டு கூட்டத்தை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடத்தியபோது, ​ஒலிம்பிக் ​கொடி முதல் முறையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

பேரோன் வடிவமைத்த இந்த கொடியில், 5 நிறங்களுடன் பின்னிப் பிணைந்த 5 வளையங்கள், வெள்ளை நிற பின்புலத்துடன் இருந்தன. 5 வளையங்களில் இடமிருந்து வலமாக நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை , சிவப்பு என 5 நிறங்கள் தீட்டப்பட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்த 5 நிறங்களைக் கொண்ட வளையங்களுக்கு, இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது. பின்னிப் பிணைந்த 5 வளையங்கள், ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 5 கண்டங்களின் ஒற்றுமையைக் குறிக்கிறது என்றும், உலக நாடுகளின் கொடிகளில் உள்ள வண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு 5 வண்ணங்கள் வளையங்களுக்குப் பூசப்பட்டதாகவும் இருவேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.

7 கண்டங்கள் இருப்பினும் வடக்கு, தென் அமெரிக்கா ஒருசேர அமெரிக்கா என்றும், அண்டார்டிக்கா தவிர்க்கப்பட்டும் 5 கண்டங்களாகக் கணக்கிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், வெள்ளை நிறம் உட்பட ஒலிம்பிக் வளையங்களில் உள்ள 6 வண்ணங்கள், 1912- இல் கொடி தயாரிக்கப்பட்டபோது சுவீடனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற நாடுகளின் தேசியக் கொடிகளைக் குறிக்கிறது என்று வடிவமைப்பாளர் பேரோன் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஒலிம்பிக் போட்டியில் அனைத்து நாடுகளும் எந்தவித பாகுபாடும் இன்றி ஒன்றிணையும் இடமாக அமைவதற்கு, இந்த 5 பின்னிப் பிணைந்த வளையங்கள் கொண்ட கொடி ஓர் அடையாளமாக அமைகிறது என்றும் அவர் விவரித்ததாகக் கூறப்படுகிறது.

ஆண்டுகள் பல கடந்தும் எந்த மாற்றத்தையும் சந்திக்காமல் இந்த கொடி, இன்றைய ஒலிம்பிக்கிலும் இடம்பெற்றுள்ளது. 32- ஆவது ஒலிம்பிக் போட்டி, இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8- ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து டோக்கியோ நகரம் முழுவதும் ஆங்காங்கே ஒலிம்பிக் கொடி அழகுற வரையப்பட்டு, உலக ஒற்றுமையை நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here