பெட்டாலிங் ஜெயா:
கடந்த 24 மணி நேரத்தில் 15,764 பேர் புதிதாக கோவிட் -19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மற்றும் 219 பேர் இந் நோய்க்கு பலியாகியுள்ளனர். இதுவரை பதிவு செய்த மரண எண்ணிக்கையில் இதுவே அதிகமானதாகும். தொடர்ந்து இறப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது கவலையளிப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், 11,767 பேர் இந் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர், மொத்தமாக நோயிலிருந்து குணமாகியவர்களின் எண்ணிக்கை 937,732 ஆக உள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை இப்போது 1,146,186 ஆக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் .
தற்போது 199,051 பேருக்கு இத்தொற்றுள்ளது என்றும் 1,063 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் சிகிச்சை பெறுகின்றனர், 532 பேருக்கு சுவாசக்கருவியின் உதவி தேவைப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 219 இறப்புகள் இன்று பதிவாகியுள்ளன. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் நடந்த மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 9,403 ஆக உயர்ந்துள்ளன.
மேலும் சிலாங்கூரில் 6,067 பேர் இன்று புதிதாக கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சிலாங்கூரிலேயே மிக அதிகமான தொற்றுப்பரவல் சம்பவங்கள் தொடர்ந்தும் அதிகரித்தவண்ணம் உள்ளது.
இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலான் (862), சரவாக் (411), ஜோகூர் (1,222), கோலாலம்பூர் (1,536), பேராக் (748), கிளந்தான் (552), கெடா (1,108), சபா (1,166), லாபுவான்(7) , பினாங்கு (667), மலாக்கா (463), திரெங்கானு (425), பகாங் (475), புத்ராஜெயா (46), பெர்லிஸ் (9) என்றும் அவர் கூறினார்.
மேலும் நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,200,473 ஆகும். தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுக்கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14.2 மில்லியன் பேர் என்றும் இரண்டு அளவுகளையும் பெற்றுக் கொண்டவர்களது மொத்த எண்ணிக்கை 7.0 மில்லியன் பேர் எனவும் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




















