ஷா ஆலாம்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சைபர்ஜெயாவிலுள்ள செர்டாங் மருத்துவமனை தாதியான (nurse) சித்தி கரினா முகமட் கமாருதீனைக் கொலை செய்த நைஜீரிய நாட்டவருக்கு, இன்று உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
குற்றம் சாட்டப்பட்ட அலோவோன்லே ஒலுவஜுவோன் கில்பெர்ட் (38) குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ அப்துல் கரீம் அப்துல் ரஹ்மான் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க உத்தரவிட்டார்.
குற்றஞ்சாட்டப்பவருக்கு எதிரான நியாயமான சந்தேகங்களுக்கு இடமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
முடிவைக் கேட்டதும், குற்றஞ்சாட்டப்பட்ட கில்பர்ட் கீழே பார்த்து அழுதார்.
கில்பர்ட் முதன்முதலில் மே 27, 2019 அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். மேலும் சைபர்ஜெயாவின் மூன்றாவது அவென்யூ காண்டோமினியத்தில் உள்ள கொண்டோமினியம் பகுதியில் சித்தி கரினா கொலை செய்யப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
தாதியான சித்தி கரினா, மே 8, 2019 அன்று காணாமல் போனதாக முதலில் தெரிவிக்கப்பட்டது. காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட அன்று மாலை 4 மணிக்கு செர்டாங் மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் கடைசியாக அவர் காணப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் செர்டாங் மருத்துவமனையின் தலைமை தாதியான அவர் , அதே ஆண்டு மே 15 அன்று கொண்டோமினியத்தின் யுனிட் ஒன்றில் மார்பு, கழுத்து மற்றும் தலையில் வெட்டுக் காயங்களுடன் அவர் இறந்து கிடந்தார்.
குறித்த தாதியின் சடலம் அவர் இறந்து நான்கு முதல் ஐந்து நாட்களின் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







