கோலாலம்பூர்: நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் டெல்தா மாறுபாட்டு வைரஸ் வகையை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார இயக்குநர் ஜெனரல் தான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மலேசியர்களை வலியுறுத்தியுள்ளார்.
அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும், தங்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் கூட்டங்களில் இருந்து தள்ளியிருக்க வேண்டும் என்றார்.
“முகக்கவசம் அணிவது உட்பட அனைத்து நிலையான செயல்பாட்டு நடைமுறைகளுக்கும் இணங்க, குறைந்த காற்றோட்டமான இடங்கள் மற்றும் நெரிசலான இடங்களைத் தவிர்க்குமாறும் மலேசியர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
“மேலும், தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள். வலுவான ஒத்துழைப்பு மற்றும் ஒழுக்கத்துடன் முன்னெடுக்கப்படும் பொது சுகாதார நடவடிக்கைகள் மக்களுக்கு பாதுகாப்பை தரும் “ என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.
டெல்தா வைரஸ் வேகமாக பரவுவதாகவும் மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு கூறும் அதே வேளை, கடந்த வியாழக்கிழமை, பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் இரண்டு டோஸ் கோவிட் -19 தடுப்பூசியை முடித்தவர்களுக்கு விரைவில் புதிய SOP முறைகளை அறிவிக்கப்படும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.