கோலாலம்பூர்: செப்டம்பர் 1 ஆம் தேதி நாடு முழுவதும் பள்ளிகளைத் திறப்பதற்கான முடிவு “ ஒரு பொறுப்பற்ற” செயல் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் தெரிவித்துள்ளார்.
கோவிட் -19 தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக பதிவாகும் போது, பள்ளிகளை திறப்பது அசாத்தியமானது. மேலும் சிலாங்கூர் தொடர்ந்து 6,000 க்கும் மேற்பட்ட தொற்றுக்களை தினமும் பதிவு செய்து வருகின்றது அதனைத் தொடர்ந்து கெடா, பினாங்கு, ஜோகூர் மற்றும் கிளந்தான் போன்ற பிற மாநிலங்களிலும் தொற்று விகிதம் அதிகரித்து செல்வதனால், இப்போது பள்ளிகளை மீண்டும் திறப்பது நல்லதல்ல என்று அவர் தெரிவித்தார் .
மாணவர்கள் கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசிகளை பெறவில்லை. ஆகையால் இந்த முடிவு மாணவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றார். மேலும், பல ஆசிரியர்களுக்கு இன்னும் முழுமையாக தடுப்பூசி போடப்படவில்லை என்றும் கூறினார்.
“இதுபோன்ற சூழ்நிலைகளில் எங்கள் குழந்தைகளை பள்ளிக்குத் திரும்ப அனுமதிப்பது ஆபத்தானது மட்டுமல்ல, பொறுப்பற்ற செயல்” என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்.
இந்த முடிவினால் பள்ளிகளில் தொற்று பரவல் ஏற்பட்டால், பொது சுகாதார அமைப்புக்கு மேலும் சுமையை இது ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
இருப்பினும், குறைந்த நோய்த்தொற்றுள்ள மற்றும் அதிக தடுப்பூசி விகிதங்களை கொண்ட, அதாவது பெர்லிஸ், சரவாக் மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பது பற்றி பரிசீலிக்கப்படலாம் என்றார்.
மற்றைய மாநிலங்களுக்கு, ஆன்லைன் கற்றல் நடவடிக்கையை இப்போதைக்கு தொடருவதே மிக சிறந்தது என்றும் தெரிவித்தார்.
தற்போதைய தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்குமாறு அவர் அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்.