தேவையற்ற நேரங்களில் உணவை எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் இன்சூலின் எதிர்ப்பு அதிகரிப்பதை ஆய்வில் கண்டுபிடித்தனர்.
காலை உணவை 8.30 மணிக்கு பிறகு எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
காலையில் சீக்கிரம் எழுந்திருப்பவர்களின் உடலில் ரத்த ஓட்டமும் சீராக இருக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. என்டோகிரைன் சொஷைட்டி (Endocrine Society) வெர்ச்ஷூவல் கான்பரன்சில் வெளியிட்ட அந்த ஆய்வில், காலை உணவை 8.30 மணிக்கு முன்பாக எடுத்துக்கொளண்டால் டைப் 2 நீரிழிவு நோயில் இருந்தும் தப்பிக்கலாம் எனக் கூறியுள்ளது.
உணவு உண்ணாமல் இருப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அறிவதற்காக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில், 8.30 மணிக்குப் பிறகு உணவு உண்டால் கூட டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதை கண்டுபிடித்தனர்.
அதேநேரம், 8.30 மணிக்கு முன்பாக உணவை எடுத்துக் கொண்டு, நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருந்தால் கூட, டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு குறைவாக இருப்பதை அறிய முடிந்ததையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பாக சுமார் 10 ஆயிரத்து 575 பேரிடம் தேசிய அளவிலான ஆய்வு அமெரிக்காவில் நடத்தப்பட்டது. அப்போது, உணவுகள் எடுத்துக்கொள்ளும் நேரத்துக்கும், ரத்தத்தில் இன்சூலின் மற்றும் சர்கரையின் அளவுகளில் ஏற்படும் மாற்றம் குறித்தும் ஆய்வு செய்தனர்.
அதில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருத்தல் அல்லது 10 மணி நேரத்துக்கும் குறைவான சமயங்களில் தேவையற்ற நேரங்களில் உணவை எடுத்துக்கொள்ளும்போது ரத்தத்தில் இன்சூலின் எதிர்ப்பு அதிகரிப்பதை கண்டுபிடித்தனர். இன்சூலின் தவிர்ப்பு என்பது டைப் 2 நீரிழிவு நோயை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். இருப்பினும், அந்த ஆய்வில் சில வித்தியாசமான முடிவுகளும் அவர்களுக்கு கிடைத்தது.
அதாவது, காலை உணவை வழக்கமாக 8.30 மணிக்கு பிறகு எடுத்துகொள்பவர்களுக்கும் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதை கண்டுபிடித்த அவர்கள், 8.30 மணிக்கு முன்பாக உணவு சாப்பிட்டுவிட்டு நாள் முழுவதும் உண்ணாமல் இருந்தால் கூட அவர்களுக்கு இன்சூலின் தவிர்ப்பு குறைவாக இருப்பதை பார்த்து வியப்படைந்தனர்.
இதிலிருந்து, முதல் உணவான காலை உணவை 8.30 மணிக்கு முன்பாக எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதில்லை என்றும், இன்சூலின் தவிர்ப்பு என்பது இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்தனர்.
எட்டோகிரைன் சொஷைட்டியின் வெளியிட்டுள்ள ஒட்டுமொத்த ஆய்வுகளின் முடிவுகளில், காலையில் சீக்கிரமாக எழுந்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும், 8.30 மணிக்கு முன்பாக காலை உணவை வழக்கப்படுத்திக் கொண்டால் டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், ரத்தத்த்தில் சர்க்கரையின் அளவும் அதிகரிக்காது என தெரிவித்துள்ளனர். காலை நேரத்தில் அதிக ஊட்டசத்து மிக்க உணவுப் பொருட்களான காய்கறிகள் மற்றும் பழங்களின் கூட்டு கலவையை எடுத்துகொள்வது மிகவும் சிறந்தது எனவும் பரிந்துரைத்துள்ளனர்.








