கோலாலம்பூர் (ஆகஸ்டு 30): மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) நேற்று இரவு சிலாங்கூர், செப்பாங்கின் டெங்கில், ஜாலான் கம்போங் சுங்கை மெலோரில் உள்ள சுரங்கப் பகுதியில் சிக்கிய 11 வயது சிறுவன் உட்பட ஒன்பது பேரை மீட்டனர்.
சிலாங்கூர் JBPM இயக்குனர் நோரஸாம் காமிஸ் இச்சம்பவம் பற்றிக் கூறிய போது, ஒன்பது நபர்கள் மீன்பிடிக்க சுரங்கப் பகுதிக்குள் நுழைந்ததாகவும், அந்த இடத்தின் நுழைவாயிலில் சுமார் மூன்று மீட்டர் உயரத்தில் தண்ணீர் நிரம்பியதால் அங்கிருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை என்றும் கூறினார்.
எனினும், பாதிக்கப்பட்ட ஒன்பது பேரும் பாதுகாப்பாக இருந்ததாகவும், நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மீட்பு நடவடிக்கையில் அவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
நேற்றிரவு 7.28 அளவில் “சுரங்கப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ஒன்பது பேர் நுழைவாயிலில் சுமார் மூன்று மீட்டர்கள் வெள்ளம் புகுந்ததால் சிக்கியுள்ளதாக KLIA தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்ததாகவும் அதன் பின்னர் ஆறு உறுப்பினர்கள் ஒரு இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று ஒரு அறிக்கையில் கூறினார்.
ஓராங் அஸ்லியினரின் உதவியுடன் மீட்புத்துறையினர் அந்த இடத்திற்கு வந்ததாகவும் பாதிக்கப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக காணப்பட்டதாகவும் நோரஸாம் கூறினார்.
“பாதிக்கப்பட்டவர்களில் 30 முதல் 40 வயதுடைய ஆறு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் மற்றும் 11 வயது சிறுவன் அடங்குவர்” என்றும் அவர் தெரிவித்தார்.