புத்ரா ஜெயா: ஐந்து வருடத்திற்கு முன்னர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, முன்னாள் இராணுவ சார்ஜன்ட் தனது சிறை தண்டனையை குறைக்குமாறு மேல்முறையீடு செய்ததில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 24 ஆண்டுகளாக மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிகரித்தது.
மேலும் அவரை 15 தடவை பிரம்பால் அடிக்கவும் உத்தரவிட்டது.
அப்துல் கரீம் அப்துல் ஜலீல் தலைமையிலான மூன்று பேர் கொண்ட மேல்முறையீட்டு அமர்வில், இரண்டு குற்றங்கள் தொடர்ச்சியாக செய்ததற்காக, 18 ஆண்டுகள் மற்றும் 6 ஆண்டுகள்-சிறைத்தண்டனைக்கான எதிர்தரப்பு வழக்கறிஞரின் மேல்முறையீட்டை நீதிமன்றம் அனுமதித்தது.
வசீர் அலாம் மைடின் மீரா மற்றும் லிம் எங் சியோங் ஆகியோருடன் அமர்ந்திருந்த கரீம், முன்னாள் சிப்பாய் குற்றங்களை செய்தார் என்பதற்கு அதிக ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால் மேல்முறையீட்டில் தண்டனையை குறைக்க எந்த தகுதியும் இல்லை என்று கூறினார்.
“செஷன்ஸ் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் சட்டம் மற்றும் உண்மைகளில் தவறு செய்யவில்லை,” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், குற்றங்கள் வேறுபட்டவை மற்றும் தனித்தனியானவை என்பதால் கற்பழிப்பு மற்றும் கொடுமைப்படுத்தியதற்கான தண்டனை தொடர்ச்சியாக பெற வேண்டும் என்பதற்காகவே அரசு தரப்பு முறையீட்டை பெஞ்ச் அனுமதித்ததாகவும் அவர் கூறினார்.
45 வயதான அந்த நபர் மேல்முறையீடு முடிவடையும் வரை 12,000 வெள்ளி ஜாமீனில் இருந்ததால், தனது சிறைத் தண்டனையை அவர் இன்று முதல் அனுபவிக்க தொடங்குவார்.
மார்ச் 15, 2016 அன்று ஜோகூர் பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய அவரது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் கொடுமைப்படுத்தியுமுள்ளார்.
செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், பாலியல் பலாத்காரத்திற்காக 10 பிரம்படி கொடுக்க உத்தரவிட்டது. மேலும் கொடுமைப்படுத்தியதற்காக 6 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்து முறை பிரம்படி கொடுக்கவும் உத்தரவிட்டது.
மேலும் விசாரணை நீதிமன்றம் குற்றவாளி 18 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் அதாவது, தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றமும் அத்தண்டனையை உறுதி செய்திருந்தது. ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றம் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பின் தண்டனையை தொடர்ந்து அனுபவிக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
துணை அரசு வழக்கறிஞர் என்ஜி சீவ் வீ அரசு தரப்பில் வழக்கை நடத்தினார், குற்றவாளி சார்பாக நூர்டின் ஹுசின் ஆஜரானார்.