கோவிட்-19 SOP களுக்கு எதிராக வழங்கப்பட்ட அபராதங்கள் மூலமாக 72 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக பணம் வசூல்; அமைச்சர் கைரி தகவல்

கோலாலம்பூர்: 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதி வரை கோவிட் -19 SOP க்களை மீறியதற்காக வெளியிடப்பட்ட அபராத அறிவிப்புகள் மூலம் மொத்தம் 72.72 மில்லியன் வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தைப்பிங் எம்பி டெக் கோக் லிமுக்கு அளித்த பதிலில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதி வரை வழங்கப்பட்ட 181,704 அபராத அறிவிப்புகளில் இருந்து இத்தொகை வசூலிக்கப்பட்டது என்று கூறினார்.

மேலும் கம்பார் எம்பி சு கியோங் சியோங்கின் கேள்விக்கு கூறிய இன்னொரு பதிலில், கைரி இதை மேலும் விளக்கி கூறினார்.

அதாவது இந்த ஆண்டு அறிவிப்புகளின் பெரும்பகுதி வெளியிடப்பட்டிருந்தாலும், பணம் வசூலிக்கப்பட்டவற்றில் பெரும்பான்மையானவை 2020 இல் வெளியிடப்பட்ட அபராதங்கள் ஆகும் என்றார்.

மேலும், 2020 ஆம் ஆண்டில் 67,542 அபராத அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, அதில் 43,685 அறிவிப்புகளிலிருந்து அபராதமாக 43.6 மில்லியன் வெள்ளி வசூலிக்கப்பட்டது என்றார்.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 114,162 அபராத அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, ஆனால் 26,627 அறிவிப்புக்களுக்கு மட்டுமே இதுவரை மொத்த அபராதமாக 29.1 மில்லியன் வெள்ளி வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here