போக்கோக் சேனாவில் வெள்ளத்தில் சிக்கிய 16 பேர் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்டனர்

அலோர்ஸ்டார், அக்டோபர் 31:

நேற்று மாலை பெய்த கனமழைக்குப் பிறகு ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த போக்கோக் சேனா, கம்போங் கோட்டானில் உள்ள மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் முகமதுல் எஹ்சான் முஹமட் ஜைன் கூறுகையில், நேற்று மாலை 5.34 மணியளவில் அந்த 16 பேரும் வெள்ளத்தில் சிக்கியதாக தீயணைப்புத்துறைக்கு அழைப்பு வந்தது.

“போக்கோக் சேனா மற்றும் அலோர்ஸ்டார் நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் கொண்ட குழு ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் ஒரு படகில் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது.

“மூன்று வீடுகளில் வசித்து வந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் தங்கள் வீடுகளில் சிக்கிக்கொண்திருந்தனர். வீடுகளின் மேல் தளத்தில் இருந்த பாதிக்கப்பட்டவர்கள் ஒரு படகு மூலம் வெளியேற்றப்பட்டனர் , ”என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஆறு ஆண்கள், ஐந்து பெண்கள், மூன்று சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகளும் அடங்குவர் என்று எஹ்சான் கூறினார். மீட்கப்படடவர்கள் அருகில் வசிக்கும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீர் வடியவில்லை என்றால் வெள்ள நிவாரண மையம் திறக்கப்படும் என கெடா சிவில் பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் கூறியதுடன், வெள்ள நிலைமையை தாம் கண்காணித்து வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here