கோத்தா பாரு, நவம்பர் 2 :
கிளந்தானில் 12,000 க்கும் மேற்பட்டவர்கள் கோவிட்-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.
கிளந்தான் உள்ளூராட்சி, சுகாதாரம் மற்றும் வீட்டு வசதிக் குழுவின் தலைவர் டாக்டர் இசானி ஹுசின் இதுபற்றிக் கூறுக்கையில், பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களில் பெரும்பாலும் முன்னணி சுகாதார அதிகாரிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆவர். மேலும் இத்திட்டத்தின் கீழ் கடந்த மாதம் முதல் அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
மாநிலத்தில் உள்ள 600,000 பேர் தங்களின் மூன்றாவது கோவிட்-19 தடுப்பூசியான பூஸ்டர் டோஸை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
“60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட சுமார் 600,000 பேர் பூஸ்டர் டோஸ்களைப் பெறுவார்கள் என்று மதிப்பிட்டுள்ளோம். அவர்கள் மாநிலத்தில் உள்ள தடுப்பூசி மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் தங்கள் பூஸ்டர் டோஸ்களைப் பெறுவார்கள்,” என்று அவர் இன்று இங்குள்ள தாருல்னைம் வளாகத்தில் (Darulnaim Complex) தனது கோவிட் -19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
டாக்டர் இசானியைத் தவிர, பல மாநில செயற்குழு உறுப்பினர்களும் தங்கள் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றனர்.
மேலும், தடுப்பூசி போட மறுத்த ஆசிரியர்களைக் கையாள்வதை மாநில அரசு கிளந்தான் கல்வித் துறையிடமே விட்டுவிடும் என்று டாக்டர் இசானி கூறினார்.
“கிளந்தானைப் பொறுத்தவரை, கிளந்தான் இஸ்லாமிய அறக்கட்டளையைச் சேர்ந்த ஆசிரியர்களுடன் மட்டுமே எங்களுக்கு பிரச்சனை இருந்தது, அவர்கள் சமீபத்தில் தடுப்பூசி போட மறுத்துவிட்டனர், இருந்தாலும் அவர்களுடன் மேற்கொண்ட ஆலோசனை அமர்வுகளுக்குப் பிறகு, இறுதியாக தடுப்பூசி போட அவர்கள் ஒப்புக்கொண்டனர் என்றார்.
“மேலும் தடுப்பூசியை மறுத்துள்ள மாநிலக் கல்வித் துறையின் கீழ் உள்ள ஆசிரியர்களுக்கு, தடுப்பூசியைப் பெற வேண்டும் நான் அவர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன், ஏனெனில் இது அவர்களை மட்டுமல்ல, மாணவர்களையும் பாதுகாக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
கோவிட்-19க்கு எதிராக இதுவரை தடுப்பூசி போடாத 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு எதிராக கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.