தோக்கியோ, நவம்பர் 11:
ஜப்பானில் இந்த ஆண்டு குளிர்காலத்தின் ஆரம்பத்தில் பறவைக் காய்ச்சல் பரவுவதைக் கண்டறிந்துள்ளனர். நேற்று (நவ.10) ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள கோழிப்பண்ணையில் “அதிக நோய்க்கிருமி கொண்ட பறவைக் காய்ச்சல்” இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜப்பானின் வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியின் அகிதா மாகாணத்தில் உள்ள யோகோடே சிட்டியின் கோழிப் பண்ணையில் கோழிகளை பிடித்து மரபணு பரிசோதனை செய்ததில் 12 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டடுள்ளது.
உடனே 1,43,000 கோழிகள் இந்த காய்ச்சலால் கொல்லப்பட்டுள்ளன. இந்த பண்ணையை சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஜப்பான் நாட்டின் மாகாணங்களிலும் கோழிக்கறி, முட்டை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் “ஜப்பானின் தற்போதைய சூழ்நிலையில், கோழி இறைச்சி அல்லது முட்டைகளை உட்கொள்வதன் மூலம் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லை என்று நாங்கள் நம்பவில்லை” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்தாண்டு, ஜப்பானில் குளிர்காலத்தில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சல் காரணமாக 9.87 மில்லியன் கோழிகள் அழிக்கப்பட்டதுடன் நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மாகாணங்கள் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
– ராய்ட்டர்ஸ்