கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான வான்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்தப் புயலைத் தொடர்ந்து அங்கு பேய் மழை கொட்டத் தொடங்கியதாகவும், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள் அழிந்துள்ளது அத்துடன் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான பண்ணை விலங்குகள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இன்னும் அங்கு சிக்கியுள்ள ஏராளமான விலங்குகள் இறக்கும் அபாயத்தில் உள்ளன என்றும் “இன்னும் பல” விலங்குகளுக்கு கால்நடை மருத்துவர்கலின் உதவியைப் பெற அரசாங்கம் விரைந்து செயல்பட்டு வருவதாக விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த அனர்த்தத்தினுள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் மாயமாகி உள்ளனர். புயல், மழை, வெள்ளப் பாதிப்புக் காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.









