தும்பாட், நவம்பர் 25 :
தற்போது நாடு முழுவதும் பெய்துவரும் மழை காரணமாக, நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள இரண்டு இடங்களை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
கோலக்கிராயில் உள்ள ஜாலான் குவா மூசாங் – லோஜிங் மற்றும் கோலக்கிராயின் குனோங் ஸ்டோங் ஆகிய இரண்டு பகுதிகளிலேயே ஆபத்தான நிலச்சரிவு ஏற்படலாம் என்று கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷஃபியன் மாமட் கூறினார்.
இந்த பகுதிகளில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
“மழைக்காலத்தில், நிலச்சரிவு மற்றும் பிற பேரழிவுகள் பொதுவாக ஏற்படும், இருந்தும் நிலச்சரிவு அடிக்கடி ஏற்படும் இரண்டு இடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
“மக்களின் பாதுகாப்பிற்காக, மற்ற ஏஜென்சிகளின் உதவியுடன் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்,” என்று இன்று தும்பாட் மாவட்ட காவல் நிலையத்தில் புதிய சூராவை திறந்து வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இந்த நிகழ்வின்போது, தும்பாட் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் அப்துல் ரசித் மாட் டாட் மற்றும் Pengkalan Kubor சட்டமன்ற உறுப்பினர் வான் ரோஸ்லான் வான் ஹமாத் ஆகியோரும் உடன் இருந்தனர்.
இது தவிர, குகைகள் மற்றும் நீர்நிலைகள் உள்ள பகுதிகளிலும் ஆபத்து ஏற்பட அதிக சாத்தியமுள்ள மற்ற இடங்களையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ஷாஃபின் கூறினார்.
மேலும் சுங்கை கம்போங் குவா, லதா ரெக் மற்றும் கம்போங் சுச்சு புத்ரி ஆகிய பகுதிகளை அவர் கூறினார்.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதிகளை கடந்து செல்லும்போது அல்லது பார்வையிடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
“அவர்கள் சமீபத்திய வானிலை முன்னறிவிப்பைக் கேட்க வேண்டும் அல்லது சமீபத்தில் திறக்கப்பட்ட எங்கள் செயல்பாட்டு அறையையும் தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
வெள்ளம் மற்றும் பிற பிரச்சனைகளுக்கு பொதுமக்களுக்கு உதவுவதற்காக வார இறுதி நாட்கள் உட்பட 24 மணி நேரமும் செயல்பாட்டு அறை திறந்திருக்கும் என்று ஷாஃபின் கூறினார்.
“எங்கள் அதிகாரிகள் செயல்பாட்டு அறையில் நிறுத்தப்பட்டுள்ளனர், மேலும் வெள்ளம் மற்றும் பிற பேரழிவுகள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்ள அவ்வப்போது தாருல்நெய்ம் வளாகத்தில் மாநில வெள்ள நடவடிக்கைகளை கையாளுபவர்களுடன் அவர்கள் ஒத்துழைப்பார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.