ஈப்போ, டிசம்பர் 14 :
இன்று பேராக் சட்டமன்றத்தில் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தின் போது, ஒரு சட்டமன்ற உறுப்பினர் செத்த, தோலுரிக்கப்பட்ட கோழியைக் கொண்டுவந்தது சட்டசபையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினரான முஹமட் அராபாத் வாரிசை முஹமட், என்பவரே பொருட்களின் விலை உயர்வை சுட்டிக்காட்டவும் குறிப்பாக கோழியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை அடிக்கோடிட்டுக் காட்டவும், தாம் கோழியைக் கொண்டு வர முடிவு செய்ததாகக் கூறினார்.
மாநிலத் தோட்டங்கள், விவசாயம் மற்றும் உணவுத் தொழில்கள் குழுத் தலைவரான ரஸ்மான் ஜகாரியா (Pas-Gunung Semanggol) க்கு இந்தப் பிரச்சினையில் அறிவுரை கூறிய அவர், விலையுயர்வு பிரச்சினையின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டவே ‘இந்த உரித்த கோழியை பரிசாக’ கொண்டு வந்ததாகக் கூறினார்.
“எக்ஸ்கோ (ரஸ்மான்) இந்த விலை உயர்வு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த கோழியை பரிசாக வழங்க விரும்புகிறேன். இந்த விலை உயர்வின் உண்மையான பிரச்சனையை எவ்வாறு தீர்ப்பது, எங்கே தவறுகள் மற்றும் தீர்வுகள் உள்ளன என்று சில்லறை விற்பனையாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மொத்த விற்பனையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்றும் நான் கேட்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
மேலும் இந்த விவாசி உயர்வு காரணமாக மக்களின் அவல நிலையைப் பற்றி நன்கு புரிந்து கொள்ளுமாறும் முஹமட் அராபாத் வலியுறுத்தினார்.




















