குவாந்தான், டிசம்பர் 18:
பகாங்கில் பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து, இன்று 57 குடும்பங்களைச் சேர்ந்த 199 பேர் 10 வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இரவு 8 மணி நிலவரப்படி, 109 பாதிக்கப்பட்டவர்கள் மாரானில் உள்ள ஐந்து வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர், மேலும் 90 பாதிக்கப்பட்டவர்கள் ரவூப்பில் உள்ள ஐந்து நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
48 மணி நேரம் பெய்த தொடர் மழையைத் தொடர்ந்து, வீடுகள் நீரில் மூழ்கியதன் காரணமாக, இன்று காலை முதல் பாதிக்கப்பட்டவர்கள் கட்டம் கட்டமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக நலத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிச்சயமற்ற வானிலை மற்றும் குறுகிய காலத்திற்குள் அதிக அளவு மழை ஆகியவை திடீர் வெள்ளத்தைத் ஏற்படுத்தும் என்றார்.
“புதன்கிழமை மழை பெய்யத் தொடங்கியதில் இருந்து தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர், நாங்கள் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தயார் நிலையில் இருந்தோம். மேலும் சுமூகமான வெளியேற்ற நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக பல நிறுவனங்களும் எங்களுடன் இணைந்துள்ளன ,” என்று அவர் கூறினார்.