கோலாலம்பூர்:
இந்தியர்களின் பாரம்பரிய மூன்று துறைகளுக்கு 7,500 வெளிநாட்டுப் பணியாளர்களை பணியமர்த்தியதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் தெரிவித்தார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, முடிதிருத்தும் கடைகள், பொற்கொல்லர்கள், ஜவுளி ஆகிய மூன்று துறையினருக்கான முடக்கத்தை நீக்குவது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இது நடந்ததாக சிவக்குமார் கூறினார்.
“அதன் முதற்கட்டமாக, மூன்று துணைத் துறைகளுக்கும் 7,500 தொழிலாளர்களின் ஒதுக்கீட்டைத் திறக்க அமைச்சரவை இன்று ஒப்புக்கொண்டது,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஆவணமற்ற மற்றும் கட்டாய உழைப்பு சுரண்டலைக் குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.