சிரம்பானில் நண்பரிடம் கடனை வசூலிக்க சென்றவருக்கு கத்திக் குத்து!

சிரம்பான், ஜனவரி 12 :

நேற்று இங்குள்ள தாமான் டுசூன் செத்தியாவில் நடந்த ஒரு சம்பவத்தில், கடனை வசூலிக்கும் நோக்குடன் சென்ற ஆடவர், அவரது நண்பருடன் ஏற்பட்ட கைகலப்பின் போது தவறுதலாக கத்தியால் குத்தப்பட்டதில் காயமடைந்தார்.

சிரம்பான் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நந்தா மரோஃப் இதுபற்றிக் கூறுகையில், நேற்று இரவு 8.30 மணியளவில் பாதிக்கப்பட்ட முகமட் ஷாரிசாத் அபு காசே, 30, என்பவர், தனது கடனை வசூலிப்பதற்காக நண்பரின் வீட்டிற்குச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவித்தார்.

28 வயதான அவரது நண்பர், கடந்த வாரம் பாதிக்கப்பட்டவரிடமிருந்து கடனாக பணம் வாங்கியதாகவும், சம்பளத்தைப் பெற்ற பிறகு கடனை அடைப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

எனினும், ‘பாதிக்கப்பட்டவர் கடனை வசூலிக்கச் சென்றபோது, ​​அவருக்கும், கூரான கத்தியை வைத்திருந்த நண்பருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியது. அப்போது தற்செயலாக அவரது வலது மார்பில் கூர்மையான கத்தி குத்தியது’ என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முகமட் ஷாரிசாத் துவாங்கு ஜாஃபர் சிரம்பான் (HTJS) மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும், சம்பவத்திற்குப் பிறகு அவரது நண்பர் தப்பி ஓடிவிட்டார் என்றும் அவர் கூறினார்.

மேலும் தப்பி ஓடிய பாதிக்கப்பட்டவரின் நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here