காபூல், ஜனவரி 18 :
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கே பாத்கீஸ் மாகாணத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டரில் 5.3 ஆக பதிவாகி இருந்தது. இதில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளிவந்தன. எனினும், இந்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்து உள்ளது என ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
வீட்டின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்த பலி எண்ணிக்கை உயர கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இவர்களில் 5 பேர் பெண்கள் மற்றும் 4 பேர் குழந்தைகள் ஆவர் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேற்கு ஆப்கானிஸ்தானில் பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.