தொடரும் போதைப்பொருள் வேட்டை; வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வெ.1.9 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல், இருவர் கைது!

ஜோகூர் பாரு, ஜனவரி 26 :

ஜனவரி 23 அன்று கெம்பாஸில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்திலும், தாமான் நுசா பெஸ்தாரியில் உள்ள குடியிருப்புப் பகுதியிலும் பல வாகனங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த RM1.9 மில்லியன் மதிப்புள்ள, பல்வேறு வகையான போதைப் பொருட்களை ஜோகூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை ஒழிக்கும் சிறப்பு நடவடிக்கை ஜனவரி 21 முதல் 23 வரை மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட Op Tapis Khas-ஐத் தொடர்ந்து, தாம் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.

“மாலை 4 மணிக்குத் தொடங்கிய இரண்டு தனித்தனி சோதனைகளில், 31 மற்றும் 34 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்களும் கைது செய்யப்பட்டனர், மேலும் இரு சந்தேக நபர்களது சிறுநீர் பரிசோதனையில் அவர்கள் மெத்தம்பேட்டமைன் மற்றும் கெட்டமைனுக்கு சாதகமாக இருப்பது கண்டறியப்பட்டதுடன் அவர்கள் முந்தைய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் பதிவுகளையும் கொண்டிருந்தனர்’ என்றார் .

‘பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் 2,50,000 போதைபித்தர்கள் பயன்படுத்த போதுமானது என்று கூறப்படுகிறது. மேலும் உள்ளூர் சந்தையில் விநியோகம் செய்யும் நோக்கத்தில் வாகனங்களில் போதைப்பொருளை மறைப்பதை இந்த கும்பல் வழக்கமாக கொண்டிருந்தது என்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தக் கும்பல் செயல்பட்டு வருகிறது’ என்றும் அவர் கூறினார்.

“இந்தச் சோதனையில் RM1.5 மில்லியன் மதிப்புள்ள 41.78 கிலோகிராம் சியாபு மற்றும் RM391,215 மதிப்புள்ள 7.11 கிலோகிராம் கெட்டமைன் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு RM1.9 மில்லியன் ஆகும்.

மேலும் “RM225,000 மதிப்புள்ள ஐந்து கார்கள், RM1,500 ரொக்கம் மற்றும் RM65,000 மதிப்புள்ள நகைகள் மற்றும் போதைப்பொருள் உட்பட பறிமுதல்களின் மொத்த மதிப்பு RM2.2 மில்லியன்” என்று அவர் ஜோகூர் காவல்துறைத் தலைமையகத்தில் (IPK) இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இரண்டு சந்தேக நபர்களும் ஜனவரி 24 முதல் ஜனவரி 30 வரை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக கமாருல் ஜமான் கூறினார்.

“ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது, மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்கப்படலாம்,” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், Op Tapis Khas சிறப்பு நடவடிக்கை மூலம், போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 512 நபர்களை போலீஸ் கைது செய்துள்ளது என்றும் கமாருல் ஜமான் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here