ரவூப், பிப்ரவரி 15 :
நேற்று நண்பகல் முதல் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, ரவூப் மாவட்டத்தில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அதாவது கம்போங் கோலா செமந்தான், கம்போங் பத்து மாலிம் மற்றும் கம்போங் உலு சுங்கை ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மண்டலம் 3, பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) தலைவர், தீயணைப்பு கண்காணிப்பாளர் ஷாருல்நிஜாம் நசீர் இதுபற்றிக் கூறுகையில், வெள்ளத்தின் காரணமாக, மூன்று தற்காலிக வெள்ள நிவாரண மையங்கள் (PPS) திறக்கப்பட்டன.
அவரது கூற்றுப்படி, 13 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 42 பாதிக்கப்பட்டவர்கள், இன்று அதிகாலை 1.40 மணி முதல் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு, அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
திடீர் வெள்ளம் காரணமாக அப்பகுதிகளில் போக்குவரத்து நிலைமையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பாலாய் ராயா கம்போங் உலு சுங்கை, மஸ்ஜிட் ஜமேக் கோலா செமந்தான் மற்றும் பத்து மாலிம் பெண்கள் செயல்பாட்டு மையம் ஆகியவற்றில் உள்ள 3 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுங்கை லிப்பிஸின் நீர்மட்டம், தற்போது அபாய அளவான 114.80 மீட்டரை விட (115.40 மீட்டர்) அதிகமாக உள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுங்கை லிப்பிஸின் தாழ்வான பகுதியில் மேலதிக நீர் வெளியேறும்,” என்றார்.