சிரம்பான், பிப்ரவரி 25 :
அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசானுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக, அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநில தேர்தல் இயக்குநராகவும் (PRN) இருக்கும் ஹாசான் வெளியிட்டுள்ள இந்தப்பதிவில் “இறைவனின் கிருபையால், இன்று நான் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு ஏழாவது நாள். நேற்று ஜோகூர் பாருவில் நடந்த ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர்களின் அறிவிப்பில் நான் கலந்து கொள்ளவில்லை.
“கோவிட்-19 வைரஸ் தொற்றுக்கு ஆளான நிலையில், நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) பின்பற்றுவதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன்.
“நீங்களும் கவனமாக இருங்கள், கோவிட்-19 வைரஸ் சமூகத்தில் எல்லா இடங்களிலும் உள்ளது” என்று அவர் கூறினார்.
நேற்று, ஜோகூர் பாரிசான் நேஷனல் (BN ) தலைவர் டத்தோஸ்ரீ ஹஸ்னி முகமட் ஜோகூர் பாருவில் நடந்த ஒரு விழாவில், ஜோகூர் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் 37 அம்னோ வேட்பாளர்கள் மற்றும் நான்கு மஇகா வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















