பணிப்பெண்களுடன் சண்டை சக பயணிக்கு பளார்.. பாதிவழியில் தரை இறக்கப்பட்ட விமானம்

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இருந்து துருக்கி நோக்கி  சென்ற ஜெட் 2 என்ற விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் பணிப்பெண்களுடன் சண்டையிடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. விமானத்தில் பயணம் மேற்கொண்ட சில குழந்தைகளின் அழுகை சத்தம் தனக்கு தொல்லை தருவதாக அந்தப்பெண் முதலில் பணிப்பெண்களிடம் கூறீயுள்ளார். பணிப்பெண்களின் பதில்களால் அவர் திருப்தியடையவில்லை.

திடீரென அங்கிருந்த பணிப்பெண்களை நோக்கி சத்தத்துடன் கத்தி சண்டையிடத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணை அமைதிப்படுத்த அங்கிருந்த பணிப்பெண்கள் முயன்றனர். ஆனாலும் அவரின் ஆக்ரோஷம் குறையவில்லை. தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவர், சக பயணிகளின் கன்னத்தில் அறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அந்த பெண்ணை அமைதிப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவை பலன் அளிக்கவில்லை. இதனால் விமானக் குழுவினர் அந்த விமானத்தை வியன்னாவுக்குத் திருப்பினர். அந்தப் பெண் சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேல் இடையூறு செய்ததாக சக பயணி ஒருவர் தெரிவித்தார்.

விமானம் வியன்னாவில் தரை இறங்கியதும் ஆயுதம் ஏந்திய போலீசார் அந்த பெண்ணை விமானத்தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர். பின்னர் அந்த விமானம் வியன்னாவில் இருந்து துருக்கியை நோக்கி புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில், அந்தப் பெண் சண்டையிடும் காட்சிகளை செல்போனில் பதிவு செய்த சகபயணி ஒருவர் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here