சுங்கை பட்டாணி, ஏப்ரல் 5 :
கடந்த வெள்ளியன்று, இங்குள்ள தாமான் பாடிக் என்ற இடத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்ததுடன் , RM14,250 மதிப்புள்ள 950 கிலோக்கிராம் கெத்தும் இலைகளையும் பறிமுதல் செய்தனர்.
சந்தேகத்திற்கிடமான நிலையில் லோரி ஒன்றில், 30 மற்றும் 41 வயதுடைய இரு சந்தேகநபர்களும், அதிகாலை 2.30 மணியளவில் சென்று கொண்டிருந்த போது, ரோந்து சென்ற போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாக கோல மூடா மாவட்ட காவல்துறை தலைமைக் கண்காணிப்பாளர் அனுவார் அப்துல் ரஹ்மான் @ அப்துல் ரஹீம் தெரிவித்தார்.
“லோரியில் மேலும் ஆய்வு செய்ததில், 95 கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்களில் கெத்தும் பச்சை இலைகள் என சந்தேகிக்கப்படும் இலைகள் அண்டை நாடுகளுக்கு கடத்தப்பட இருந்ததாக நம்பப்படுகிறது” என்று, இன்று கோல மூடா மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அவர் கூறினார்.
இரு சந்தேக நபர்களும் கடந்த மாதம் முதல் இந்த கெத்தும் இலைகள் விநியோகத்தில் ஈடுபட்டதாக, முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விஷச் சட்டம் 1952 இன் பிரிவு 30 (3) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கெத்தும் இலைகளை 23,750 போதைப்பித்தர்கள் பயன்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.