மலாக்கா, ஏப்ரல் 21 :
உணவு வணிகர்களின் அதிக தேவை காரணமாக, மலாக்காவில் C தரத்திலான கோழி முட்டைகளுக்கு பற்றாக்குறையை எதிர்கொள்வதாக மாநில ஒருமைப்பாடு, தகவல், மனித வளங்கள் மற்றும் நுகர்வோர் விவகாரக் குழுத் தலைவர் ங்வே ஹீ செம் கூறினார்.
C தர கோழி முட்டைக்கான அதிக கிராக்கி அதன் விலையின் காரணமாக உள்ளது, இது தரம் B (39 சென்) மற்றும் தரம் A (41 சென்) உடன் ஒப்பிடும்போது, தரம் C முட்டைகள் ஒவ்வொன்றும் 37 சென் விலையில் உள்ளது.
“கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து இந்தப் பிரச்னை கண்டறியப்பட்டது. இது ஜனவரியில் சரியான நிலைபெற்றது, ஆனால் பிப்ரவரியில், சீன புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக வரத்து குறைந்துள்ளது,” என்று அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
அதனைத்தொடர்ந்து மார்ச் மாதத்தில் நிலைமை மீண்டும் சீரானது, ஆனால் ஏப்ரல் மாதத்திற்குள், நோன்பு மாதத்தின் காரணமாக மீண்டும் பற்றாக்குறை ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
தரம் A மற்றும் தரம் B வகை கோழி முட்டைகள் உள்ளூர் சந்தையில் ஏராளமாக இருப்பதாகவும், சில சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
எனவே, விலையில் பெரிய வித்தியாசம் இல்லாததால், ஏ மற்றும் பி வகை முட்டைகளை பயன்படுத்துமாறு வியாபாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.