ஜோகூர் பாரு, ஏப்ரல் 25 :
குதிரைப் பந்தய சூதாட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக ஜோகூர் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில், நேற்று ஸ்கூடாய், தாமான் உங்கு துன் அமினா என்ற இடத்தில் ஒரு பெண் உட்பட 33 நபர்களை கைது செய்தனர்.
ஜோகூர் குற்றப் புலனாய்வுத் துறையின் தலைவர், மூத்த துணை ஆணையர் ஷாஹுரினைன் ஜெய்ஸ் கூறுகையில், 36 முதல் 76 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் பிற்பகல் 3.15 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட Op Dadu நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
“ஜோகூர் கன்டிஜென்ட் போலீஸ் தலைமையகத்தின் (IPK) டி7 பிரிவின் போலீஸ் குழு மற்றும் ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் (IPD) ஜேஎஸ்ஜே பிரிவினரும் இணைந்து, தாமான் உங்கு துன் அமினாவில் சோதனையில் ஈடுபட்டது.
இந்த சோதனையின் போது, 36 முதல் 76 வயதுடைய 32 ஆண்களையும், ஒரு உள்ளூர் பெண்ணையும் போலீசார் கைது செய்தனர், என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், அவர்களிடமிருந்து மொத்தம் 37 மொபைல் போன்கள், 6 நோட்டு தாள்கள், குதிரைப் பந்தய அட்டவணைகள் அடங்கிய 19 சீன மொழியில் எழுதப்பட்ட செய்தித்தாள்கள் மற்றும் RM29,981 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரும் பந்தயச் சட்டம் 1953 இன் பிரிவு 6 (1) மற்றும் 6 (3) இன் கீழ் விசாரிக்கப்படுவதாக ஷாஹுரினைன் கூறினார்.
சூதாட்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் 07-2254074 என்ற தொலைபேசி எண்ணில் ஜோகூர் கன்டிஜென்ட் செயல்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.