கோலாலம்பூர்:
ஜோகூர் பாரு, தாமான் டாயாவில் உள்ள ஒரு வீட்டில் நடத்தப்பட்ட ‘Op Taring Alpha 1’ அதிரடிச் சோதனையில், RM769,480 மதிப்புள்ள வரி செலுத்தப்படாத கடத்தல் சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், மூன்று வெளிநாட்டினரைக் கைது செய்துள்ளனர்.
நேற்று (புதன்கிழமை) இரவு 10:00 மணியளவில், புக்கிட் அமான் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு விவகாரத் துறையின் கீழ் இயங்கும் வனவிலங்கு குற்றப் பிரிவு/சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (WCB/PSK), ஜோகூர் மாநிலக் காவல்துறையின் D7 மற்றும் D9 பிரிவுகளின் உதவியுடன் இந்தச் சோதனையை மேற்கொண்டது.
இந்தச் சோதனையின் போது 26 மற்றும் 49 வயதுடைய இரண்டு வங்காளதேச ஆண்கள் மற்றும் 51 வயதுடைய இந்தோனேசியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக WCB/PSK தளபதி டத்தோ முகமது ஜாகி அஷார் தெரிவித்தார்.
அங்கிருந்த வீடு மற்றும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘புரோட்டான் எக்ஸோரா’ (Proton Exora) ரக கார் ஆகியவற்றிலிருந்து பல்வேறு பிராண்டுகளைச் சேர்ந்த, வரி செலுத்தப்படாததாகக் கருதப்படும் 292,000 சிகரெட் சுருள்களைப் (Sticks) போலீசார் பறிமுதல் செய்தனர்.
“பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் சந்தை மதிப்பு மற்றும் வரிகளையும் சேர்த்து இதன் மொத்த மதிப்பு RM769,480 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிரடிச் செயல்பாட்டின் மூலம், ஜோகூர் பாரு பகுதியில் இயங்கி வந்த கடத்தல் சிகரெட் சேமிப்பு மற்றும் விநியோகக் கட்டமைப்பு (Distribution Network) முறியடிக்கப்பட்டுள்ளது,” என்று டத்தோ முகமது ஜாகி அஷார் கூறினார்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது 1967-ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் பிரிவு 135(1)(d) மற்றும் 1959/63 குடிவரவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(c)-இன் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்த கடத்தல் கும்பலின் பின்னணியில் இருந்து கொண்டு தப்பியோடிய முக்கியப் புள்ளியைக் (Mastermind) காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.




















