புத்ராஜெயா, ஏப்ரல் 28 :
நிலுவையில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து, அனுமதிப்பதற்காக மனிதவள அமைச்சகம் தற்காலிக சிறப்புக் குழுவை அமைத்துள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட தொழிலாளர் சட்டத்திற்கு இணங்குவதற்கான ஒப்பந்தத்தில் முதலாளிகள் கையெழுத்திட வேண்டும் என்றும் வேலை வழங்குநர்கள் புத்ராஜெயாவில் நடைமுறைப்படுத்தப்படும் நேர்காணலில் பங்குகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“நேர்காணலுக்கான சந்திப்புத் தேதியைப் பெற்ற முதலாளிகள், நேர்காணல் தேதியை மறுஅட்டவணை செய்வதற்காக தொடர்பு கொள்ளப்படுவார்கள், இதனால் அவர்களின் விண்ணப்ப செயல்முறை துரிதப்படுத்தப்படும்.
“உற்பத்தி, கட்டுமானம் மற்றும் தோட்டம் போன்ற உள்ளூர் மக்களின் விருப்பமில்லாத துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படுகிறது.
“KSM ஆல் எந்தவொரு விண்ணப்பமும் கைமுறையாகச் (manually) செயல்படுத்தப்படாது என்பதையும், வெளிநாட்டு தொழிலாளர் ஒதுக்கீடு விண்ணப்பங்களை https://fwcms.com.my/ மூலம் மட்டுமே அணுக முடியும் என்பதையும் மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன்,” என்று அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.








