கிள்ளான், மே 30 :
தொழிற்சாலை ஒன்றில் நடந்த இரண்டு கொள்ளைச் சம்பவங்களுக்குப் பிறகு, கடந்த வாரம் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் நடவடிக்கையில், ஒன்பது தனித்தனி சோதனைகளில் தொடர்புடையதாகக் கருதப்படும் 12 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களும் ஏப்ரல் 27 மற்றும் மே 20 ஆகிய தேதிகளில், மேற்கு மேரு தொழிற்பேட்டையில் உள்ள அலுமினிய தொழிற்சாலையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது .
சந்தேக நபர்கள் அனைவரும் விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் 20 முதல் 40 வயதுடையவர்களில் ஒரு இந்தோனேசியரும் 11 உள்நாட்டினரும் அடங்குவர் என வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் விஜய ராவ் சமச்சுலு தெரிவித்தார்.
மேலும், அவர்களில் 11 பேருக்கு போதைப்பொருள் உட்பட முந்தைய குற்றப் பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது, ”என்று அவர் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அனைத்து தொடர் சோதனைகளிலும், 232 பிட்காயின் இயந்திரங்கள், 39 யூனிட் மின்சார விநியோகிப்பான் , ஐந்து மொபைல் போன்கள் மற்றும் இரண்டு நிசான் சென்ட்ரா மற்றும் புரோத்தோன் வீரா கார்கள் என்பவை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டன.
மே 23 அன்று தொழிற்சாலை இயக்குநர் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கொள்ளையின்போது அங்கிருந்த 180 பிட்காயின் இயந்திரங்கள் திருடப்பட்டதில் தொழிற்சாலைக்கு 180,000 வெள்ளி வரை இழப்பு ஏற்பட்டது என்றார்.
“இந்தக் கைதுகளை தொடர்ந்து வட கிள்ளானைச் சுற்றி நடந்த பிட்காயின் இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட மூன்று கொள்ளை வழக்குகளைத் தீர்க்க முடிந்தது,” என்று அவர் விளக்கினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் 395 மற்றும் 397 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.