மாணவர் போராட்டங்களால் நிலைகுலைந்த ஜகார்த்தா: குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்!

கோலாலம்பூர்:

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் (Jakarta) நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களை அடுத்து, அங்குள்ள மலேசியப் பிரஜைகள் அனைவரும் போராட்டப் பகுதிகளைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜகார்த்தாவில் உள்ள மலேசியத் தூதரகம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

மத்திய ஜகார்த்தாவில் வெள்ளிக்கிழமையான இன்று போராட்டங்கள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுவதால், மலேசியர்கள் அனைவரும் உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவிப்புகள் மற்றும் செய்திப் பதிவுகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து தூதரகம் இன்று வெளியிட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைக் குறிப்பில், ஜகார்த்தாவின் முக்கியப் பகுதிகளான ‘புந்தாரான் ஹெச்ஐ’ (Bundaran HI) மற்றும் ‘பாதுங் கூடா’ (Patung Kuda – அர்ஜுனா விவாஹா சிலை) ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவரங்களைத் தாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

இப்போராட்டங்கள் காரணமாக ஜாலான் எம்ஹெச் தம்ரின், ஜாலான் ஜெனரல் சுதிர்மான் மற்றும் ஜாலான் மேடான் மெர்டேகா பாரத் ஆகிய முக்கியச் சாலைகளில் இன்று நாள் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் தடங்கல்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here