பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் வந்த அமெரிக்க டிக்டாக் பிரபலம் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். 21 வயதான அந்த பெண் கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தானில் உள்ளார். இவர் சுற்றுப் பயணம் செய்து வீடியோ எடுத்து பேஸ்புக், டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் பதவிட்டுவருகிறார். அதிக போலயர்களைக் கொண்ட பிரபலமான இவர், கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயண அனுபவங்களை வீடியோ எடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்த பெண்ணுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த முசாமில் சிப்ரா, அசான் கோசா ஆகிய இருவர் சமூக வலைத்தளம் மூலம் ஏற்கனவே நட்பாகியுள்ளனர். இந்த பெண் பாகிஸ்தான் வந்த நிலையில், இவரை அந்நாட்டின் கராச்சியில் உள்ள முன்ரோ கோட்டைக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஜூலை 17ஆம் தேதி அந்த பெண் கராச்சிக்கு சென்று இரு நண்பர்களையும் சந்தித்துள்ளார். மூவரும் முன்ரோ கோட்டை அருகே உள்ள ஹோட்டலில் தங்கிய நிலையில், அந்த கோட்டையை சுற்றிப் பார்த்து தனது vlog கண்டென்டுக்கு வீடியோ எடுத்துள்ளார் அந்த பெண்.
பின்னர், மூவரும் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார். அன்றைய இரவு அந்த பெண்ணை ஹோட்டலில் நண்பர்கள் இருவரும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, அதை வீடியோ எடுத்துள்ளனர். இந்த விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோவை வெளியிட்டுவிடுவோம் என பிளாக்மெயில் செய்து மிரட்டியுள்ளனர்.
ஆனால், பாதிக்கப்பட்ட பெண் தைரியமாக தனக்கு நேர்ந்த அவலத்தை பஞ்சாப் மாகாண காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளார். அதன்படி புகாரை ஏற்று எப்ஐஆர் பதிந்த காவல்துறை, விரைந்து நடவடிக்கை எடுத்து இருவரையும் கைது செய்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மாகாண காவல்துறை தலைவர் விரிவான அறிக்கை தர வேண்டும் என பஞ்சாப் மாகாண முதலமைச்சர் ஹம்சா ஷெபாஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்து அவருக்கு வேண்டிய உதவிகளை தரும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.