இலங்கையில் சீனாவின் உளவு கப்பல் வருகை தருவது தொடர்பாக இந்தியா, சீனா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே பூசல் நிலவி வருகிறது. சீனாவின் உளவு கப்பலான யுவான் வங் 05 என்ற கப்பல் இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வருகை தருவதாக கடந்த மாதம் இறுதியில் தகவல் வெளியானது.
இந்த உளவு கப்பலின் வருகை என்பது இந்திய எல்லை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என இந்தியா இலங்கையிடம் கூறி கப்பல் வருகையை தடுக்கும் முயற்சியில் களமிறங்கியது. இந்தியாவின் அழுத்தத்தை ஏற்று இலங்கை வெளியுறவுத்துறையும் சீனாவை தொடர்பு கொண்டு உளவு கப்பலை ஹம்பன்தோட்டை துறைமுகத்திற்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தியது.
இந்தியாவின் இந்த செயலுக்கு சீனா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீனா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை என்பது இறையாண்மை கொண்ட நாடு. அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கைகளில் இந்தியா தேவையில்லாமல் தலையிடுவது முறையல்ல.
இலங்கை சீனா உறவில் மூன்றாம் தரப்பு தலையிடுவது தேவையற்ற ஒன்று. மேலும், அணி சேராக் கொள்கையின் படி இலங்கை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எந்த நாட்டுடனும் உறவு வைத்திருக்கலாம்.எனவே, உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியா தேவையில்லாமல் தலையிட வேண்டாம் என எச்சரித்துள்ளது.