புக்கிட் ஜாஜலில்:
நாட்டிலுள்ள குடிநுழைவு துறை தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளோரில் அதிக எண்ணிக்கையிலான இந்தோனேசியர்கள் கைதிகளாக உள்ளனர்.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, நாடு தழுவிய நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த வெளிநாட்டவர்களில் சுமார் 25 விழுக்காட்டினர் இந்தோனேசியர்கள், குறிப்பாக மொத்தம் 13,530 கைதிகளில் 3,375 பேர் இந்தோனேசியர்கள் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.
மேலும் இவ்வாறான குடிநுழைவு தடுப்பு முகாம்களில் அதிக எண்ணிக்கையை பதிவு செய்த முதல் ஐந்து நாடுகள் இந்தோனேசியா (3,375 -25%), பிலிப்பைன்ஸ் (3,345 -24.7%), ரோஹிங்கியாக்கள் (2,653 -19.6%), மியன்மார் (1,988 -4.7%) , வங்காளதேசம் (719 -5.3%), மற்றும் தாய்லாந்து (340 -2.5%) என்று அவர் கூறினார்.
“மீதம் உள்ளவர்கள் (1,110 -8.2 %) முறையே சீனா, இந்தியா, வியட்நாம், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் கம்போடியா உள்ளிட்ட பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள்” என்று புக்கிட் ஜாலில்குடிநுழைவு தடுப்பு முகாமிலுள்ள குழந்தைகளுக்கு ஹரி ராயா ஆடைகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
நாடுமுழுவதுமுள்ள குடிநுழைவு தடுப்பு முகாம்களில் மொத்தம் 9,438 ஆண்கள், 2,696 பெண்கள், 772 சிறுவர்கள், 624 சிறுமிகள் அடங்குவதாக அவர் கூறினார்.
ஒரு நாட்டின் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள், அவரவர் நாட்டின் தூதரகம் மூலமாக தங்கள் ஆவணங்களை பெற்றவுடன் உடனடியாக அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று கூறிய அவர், ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை, அரசாங்கம் 11,303 பேரை அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாகவும் சொன்னார்.























