புத்ராஜெயா, ஆகஸ்ட் 30 :
அம்னோவால் தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், இல்லையெனில் கட்சியால் பதவி நீக்கம் செய்யப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படும் கருத்தை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மறுத்துள்ளார்.
அம்னோ துணைத் தலைவருமான அவர் இது தொடர்பில் கருத்துரைக்கையில், சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) அம்னோ உச்ச மன்ற கூட்டம் சூடான வாதங்கள் மற்றும் அன்பாகவும் நடந்து முடிந்துள்ளது என்றார்.
“எந்தப் பிரச்சினையும் இல்லை, சில நேரங்களில், வெளியில் உள்ளவர்கள் விஷயங்களை வித்தியாசமாகப் பார்க்கிறார்கள், ஆனால் கட்சியின் உள்ளே நிலைமை வேறுபட்டது.
“அம்னோவில் எந்தப் பிரச்சினையும் இல்லை; கருத்து வேறுபாடுகளை நாங்கள் மதிக்கிறோம்,” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 30) வருடாந்திர அரசு ஊழியர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
அம்னோ தேசிய தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது என்றும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் சிறப்பு மாநாட்டில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது என்றும் செய்திகள் வெளியாகியிருந்தது தொடர்பில் வினவியபோதே அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 2023 ஜூலையில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.