சிலாங்கூரில் உள்ள ஒரு மாவட்ட நகராண்மைக்கழகத்தின் முன்னாள் தலைவர் மீது ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நாளை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படும்.
நிர்வாக மற்றும் தூதரக அதிகாரியாக (PTD) இருந்த சந்தேக நபர் 48, திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக ஒப்பந்ததாரர்கள் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டாளர்களிடம் இருந்து 100,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) ஆதாரம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மூன்றாவது முன்னாள் மாவட்ட நகராணமைக்கழகத் தலைவர் அவர் ஆவார் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.
செப்டம்பர் 23 அன்று, உலு லங்காட் மற்றும் கோல லங்காட்டின் முன்னாள் மாவட்ட கவுன்சில் தலைவர்கள் மற்றும் சிப்பாங் மாவட்ட நகராண்மைக்கழக துணைத் தலைவர் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சிலாங்கூரில் பல்வேறு மாவட்டங்களில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள திட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் வீட்டு வசதி மேம்பாட்டாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
பணம், விமான டிக்கெட்டுகள், விலை உயர்ந்த சைக்கிள்கள், ஐபோன்கள் என லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. சிலாங்கூர் மாவட்டத்தில் துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான டெண்டர்கள் குறித்த தகவல்களை கசியவிட்டதற்கு ஈடாக டிசம்பர் 2019 மற்றும் நவம்பர் 2020 க்கு இடையில் ரிம50,000க்கு மேல் லஞ்சம் பெற்றதாக ஒரு அளவு ஆய்வாளர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. 2012 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் குறைந்தது நான்கு மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்பிலான திட்டங்களை பெற விரும்பும் கும்பலின் ஒரு பகுதியாக இருந்த ஒரு நிறுவனத்துடன் அவர்கள் சதி செய்ததாக நம்பப்படுகிறது என்று ஆதாரம் மேலும் கூறியது.