பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனில் நெஸ்கோல் லிமிடெட் மற்றும் நீல்சன் எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனங்கள் பார்க் லேனில் உள்ள அவென்பீல்ட் ஹவுசில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வந்துள்ளது. இந்த குடியிருப்புகள் சட்டவிரோதமாக வாங்கப்பட்டதாக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை பணியகம் குற்றம் சுமத்தியது.
மேலும், கடந்த 2006-ம் ஆண்டு மரியம் நவாஸ் போலி பத்திரங்களை தயாரித்தாகவும் அவரது கணவர் கேப்டன் சப்தார் அதில் கையெழுத்திட்டதாகவும் குற்றம்சுமத்தியது. இது தொடர்பாக வழக்கு தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு மரியம் நவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஆகஸ்டில் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர்.
அதே ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அவர்களது தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில், அவென்பீல்ட் ஹவுஸ் ஊழல் வழக்கில் இருந்து பிஎம்எல்-என் துணைத் தலைவர் மரியம் நவாஸ் மற்றும் அவரது கணவரை விடுதலை செய்து இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் மரியம் நவாஸ் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும்.




















