வேண்டுதல் நிறைவேற கடவுளை இப்படி வழிபடுங்கள்

சிலருக்கு வேண்டியது விரைவாக கிடைக்கிறது. மற்றவர்களுக்கு எவ்வளவு பிரார்த்தித்தாலும் கஷ்டங்கள் தொடர்கின்றன. இதற்குக் காரணம் என்ன என பலரும் யோசிப்பது உண்டு. வழிபடும் முறை, மனநிலை மற்றும் நம்பிக்கை ஆகியவை தான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. முதலில் கோவிலுக்கு எதற்காக செல்கிறோம், எதற்காக நாம் தினமும் இறை வழிபாடு செய்ய வேண்டும் என்ற உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

கோவிலுக்கு செல்வது வெறும் பழக்கம் அல்ல. அது ஒரு ஆன்மிக ஒழுங்கு. சிலர் கோவிலுக்குள் நுழைந்தவுடன் “எனக்கு இது இல்லை… அது இல்லை… கஷ்டம்… துன்பம்…” என்று புலம்பத் தொடங்கி விடுகிறார்கள். அல்லது தன்னுடைய கஷ்டங்கள், தேவைகளை வரிசையாக பட்டியலிட துவங்கி விடுவார்கள். இது தவறா? என்று கேட்டால், புலம்புவது தவறில்லை. ஆனால் எதிர்மறை உணர்வில் உறுதியாக நின்று வேண்டுவது தவறு.

சரியான வழிபாட்டு முறை :

  • கோவிலுக்கு சென்றால், முதலில் மனதை அமைதியாக்குங்கள்.
  • சன்னதியில் இறைவனை கண்ணார தரிசியுங்கள்.
  • அவரது நாமத்தை வாயார உச்சரியுங்கள்.
  • பிரகாரத்தை சுற்றி வலம் வாருங்கள்.
  • கொடி மரத்தின் முன் நின்று வணங்குங்கள்.
  • பின்னர் அமைதியாக அமர்ந்து மனதார வேண்டுங்கள். இந்த அமைதி தான் பிரார்த்தனையின் உயிர்.

ஒரு பெண் தினமும் கோவிலுக்கு செல்வாள். ஆனால் அவளின் வேண்டுதல் நிறைவேறவில்லை. ஒருநாள் கோவில் பூசாரி கேட்டார், “நீ எப்படிப் பிரார்த்திக்கிறாய்?” அவள் சொன்னாள், “எனக்கு வீடு இல்லை, பணம் இல்லை, என் வாழ்க்கை சீராக இல்லை…” என்று தினமும் சொல்கிறேன். பூசாரி சிரித்தார். “அம்மா, நீ தினமும் உன் வாழ்க்கையை குறையாகவே அறிவிக்கிறாய். நீ சொல்வதை பிரபஞ்சம் ஏற்றுக் கொள்கிறது”. அன்று முதல் அவள் மாறினாள்.”இறைவா, நீ எனக்கு நல்ல வீடு தருவாய். என் குடும்பத்தில் அமைதி நிலைக்கும். என் கடன் அடையும். என் உடல் நலம் வளரும்” என்று நம்பிக்கையுடன் வேண்டினாள். சில மாதங்களில் அவளின் மனநிலை மாறியது. மனநிலை மாறியபின் வாழ்க்கையும் மாறத் தொடங்கியது. நாம் எதை உறுதியாக நம்புகிறோமோ அதற்கே நம் மனமும், செயல்களும் வழி வகுக்கும்.

நம்பிக்கை உறுதி, மனம் அமைதி, செயலில் முயற்சி, எதிர்மறை எண்ணம் குறைவு இவைகளே சிலரின் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேற காரணம். வேண்டுதல் நிறைவேற வேண்டுமெனில், மனதை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறருக்கு தீங்கு நினைக்காதீர்கள். நன்றி சொல்லும் பழக்கம் வளர்த்துக் கொள்ளுங்கள். கிடைத்தவற்றை மதியுங்கள். நன்றி உள்ள இடத்தில் அருள் தங்கி நிற்கும். வாழ்க்கையில் இதுவரை கிடைத்தது, கிடைக்காமல் போனது என அனைத்தும் நமக்கு நன்மையை தருவதற்காக என நினைத்து, அதற்காக இறைவனுக்கு தினமும் நன்றி சொல்ல மறக்காதீர்கள். நான் விரும்புவதை எனக்கு கொடு என இறைவனிடம் வேண்டுவதற்கு பதில், எனக்கு எது நல்லதோ அதை எனக்கு கொடு என வேண்டுங்கள். நமக்குள் நல்ல எண்ணங்கள், எதிர்மறை ஆற்றல்கள் பரவ துவங்கும் போது, இறையருள் தானாக கிடைக்கும். நமக்கு தேவையானதை பிரபஞ்சம் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here