நிபோங் தேபால், அக்டோபர் 20 :
இன்று காலை ஜூரு, புக்கிட் தம்புன் அருகே வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 151.4வது கிலோமீட்டரில் அவர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில், ஓட்டுநர் உட்பட 10 தொழிற்சாலை ஊழியர்கள் காயமடைந்தனர் என்று பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுத் தளபதி அசார் சம்சுடின் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக காலை 6.38 மணிக்கு தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, சுங்கை பகாப் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் உறுப்பினர்கள் குழு மீட்பு நடவடிக்கைகளுக்காக சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்றது.
“சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, ஒரு வேன் சாலையில் சறுக்கி மின்கம்பத்தில் மோதியது தெரிந்தது.
“இந்தச் சம்பவத்தில் ஓட்டுநர் வாகனத்தில் சிக்கிக் கொண்டார், இருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது, மேலும் ஏழு பேர் லேசான காயமடைந்தனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆரம்ப சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், சுகாதார அமைச்சகம் மற்றும் அவசரகால சேவைகள் ஆதரவு பிரிவின் ஆம்புலன்ஸ்கள் மூலம் மேல் சிகிச்சைக்காக செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்று அவர் கூறினார்.








