கோத்தா கினாபாலு, அக்டோபர் 21 :
நேற்று, இங்குள்ள பெக்கான் மங்காதாலில் விளையாட்டு நடவடிக்கையின் போது, தொடக்கப் பள்ளியின் ஐந்தாம் ஆண்டு மாணவர் மீது இரும்புக் கோல் கம்பம் உடைந்து விழுந்ததில், 11 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நண்பகல் 12.20 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 11 வயது மாணவன், இங்குள்ள லிக்காஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கோத்தா கினாபாலு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ஜைதி அப்துல்லா தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மைதானத்தில் பள்ளியின் ஆண்டு விளையாட்டு நடவடிக்கையின் போது, இரும்புக் கோல் கம்பத்தின் குறுக்கு கம்பி உடைந்து அவரின் தலையில் மோதியதாக நம்பப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்தில் விசாரணையில் குற்றத்தின் கூறு எதுவும் இல்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், ஆனால் மேலதிக விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும் முகமட் ஜைதி கூறினார்.
இந்த சம்பவத்தின் 14 வினாடிகள் கொண்ட வீடியோப் பதிவு சமூக ஊடகங்களில்வைரலானது, வீடியோவில் உள்ள காட்சியின் அடிப்படையில், கோல் கம்பத்தில் உள்ள குறுக்கு கம்பி உடைந்து பாதிக்கப்பட்டவரை தாக்கியதாக நம்பப்படுகிறது.