கோலாலம்பூர்:
ஜோகூரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியில் சூதாட்ட மையம் அமைக்க அரசாங்கம் அனுமதி வழங்க திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட 128.5 பில்லியன் வெள்ளி செலவில் உருவாக்கப்பட்ட ஃபாரஸ்ட் சிட்டிக்கு இந்த திட்டம் புத்துயிர் கொடுக்கும் என்று வணிக் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஜோகூர்- சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம், ஒருங்கிணைந்த வணிகம் மற்றும் முதலீட்டு மையமாக விளங்கக்கூடும். அதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து மேலும் எளிமையாகும் என்று கூறப்படுகிறது.
மலேசியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஜோகூர் பொருளியல் ரீதியாக வேகமாக வளர்ந்தும் வருகிறது..
மலேசியாவில் தற்போது உள்ள ஒரே சூதாட்ட மையம் கெந்திங் நிர்வாகத்தில் உள்ளது. மேலும் அது செந்தோசாவில் உள்ள ரெசார்ட் வோர்ல்ட் சொந்தோசாவிலும் நிர்வாகம் செய்கிறது.
ஃபாரஸ்ட் சிட்டியை சிறப்பு நிதி மையமாக மாற்றி அங்கு செயல்படும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை, எளிதாக விசா சேவை வழங்கக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் நாட்டில் இரண்டாவது சூதாட்ட மையம் அமைப்பது அரசியல் ரீதியாக அன்வார் இப்ராகிமுக்கு பின்னடைவைத் தரலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.